வாட்ஸ் ஆப், கூகுள் ஹேங் அவுட்ஸ், ஆப்பிள் ஐமெசேஜ் உள்ளிட்டவற்றின் மெசேஜ்களை 3 மாதங்கள் வரை அழிக்கக்கூடாது, இந்த கட்டுப்பாட்டை மீறினால் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த வழிகளில் வரும் மெசேஜ்கள் குறியீட்டுச் சொற் களாக மாற்றப்பட்டு வருவதே இதற்கு முக்கிய காரணம். உதாரணமாக வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றில் நாம் அனுப்பும் செய்திகள் தானாவே குறியீட்டுச் சொற்களாக மாற்றப்பட்டு அனுப்பப்படுகின்றன. அதனை பெறுபவர்களின் ஸ்மார்ட் போனில் மட்டுமே நாம் அனுப்பிய தகவலை படிக்க முடியும்.
இப்போது தேசிய குறியீட்டுச் சொற்கள் வரைவு சட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது அமல் படுத்தப்பட்டால், அனைவரும் தங்கள் வாட்ஸ் ஆப், ஹேங் அவுட்ஸ், ஐமெசேஜ் உள்ளிட்ட வற்றை 3 மாதங்கள் வரை கண்டிப் பாக அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்த புதிய சட்டத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ள மத்திய அரசு இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்குமாறு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த புதிய சட்டத் தின்படி பொதுமக்களுக்கு இண்டர்நெட் மூலம் தகவல்களை பரிமாறுவதிலும் தகவல்களை கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றில் பதிவு செய்து வைப்பதிலும் குறியீட்டு சொற்கள் வசதியை பயன்படுத்த உரிமை உண்டு. அதே நேரத்தில் அதற்கான செயல்முறையை முக்கியமாக அல்கோரிதம் வடிவமைப்பு, “கீ சைஸ்” உள்ளிட்டவற்றை அரசின் அப்போதைய அறிவிப்பின்படி செயல்படுத்த வேண்டும்.
இதன்படி கூகுள், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்தியாவில் மத்திய அரசு கூறும் குறியீட்டு சொல் வடிவமைப்பு முறையையே பயன்படுத்த வேண்டும்.
மேலும் இந்த வசதியை (வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றை) பயன்படுத்தும் அனைவரும் தங்கள் ஸ்மார்ட் போனில் பெறும் தகவல்கள், அனுப்பும் தகவல்களை கண்டிப்பாக 3 மாதங்கள் வரை அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிருக்கும்.
