உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி ஆரம்பித்து, மார்ச் 29ஆம் திகதி முடிவடைகின்றது. உலகின் 14 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகளில் 26 போட்டிகள் அவுஸ்திரேலியாவிலும், 23 போட்டிகள் நியூசிலாந்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் இந்தியா ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. பாகிஸ்தானுடன் இந்த உலக கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியை சந்திக்க உள்ளது. பெப்ரவரி 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் அமிதாபச்சன் கிரிக்கெட் வர்ணனை செய்கின்றார். சுவாரஸ்யமான இந்த நிகழ்ச்சியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஷமிதாப் படக்குழுவினர் ஏற்பாடு செய்து உள்ளனர். இந்த வர்ணனையில் கபில்தேவ், ஷோயிப் அக்தர், ஹரிசா போக்லே, ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.
இது குறித்து நடிகர் அமிதாப் கூறும் போது, இந்தியா மிகவும் உணர்ச்சிவசப்படுவது இரண்டு விடயங்களில் ஒன்று சினிமா, மற்றொன்று கிரிக்கெட். இவை இரண்டும் தனக்கு சேர்ந்து வருவது அற்புதமான நேரம் என்று கூறியுள்ளார். மேலும் கிரிக்கெட் வர்ணனையில் சேர்ந்து கொள்வதில் மிகவும் பெருமையடைவதாகவும் அவர் கூறி உள்ளார்.
